Saturday 29 June 2013

திருமணத்தை பதிவு செய்வது எப்படி? எங்கே?



“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?

கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?

திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?

பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?

ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?

ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.
அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

கீழ் கண்ட இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு திருமண விபரத்தை அறியலாம்.

http://www.tnreginet.net/english/smar.asp

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir